Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்

Print PDF
தினமணி       02.04.2013

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நகராட்சி சார்பில் மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ளது மாவட்ட தலைமை மருத்துவமனை.

இந்த மருத்துவமனைக்கு பொள்ளாச்சி, சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் தினமும் 5 மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை நகராட்சி சார்பில் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திட்டத்தை தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் பேசியது:

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற, பாலக்காடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதை தவிர்க்கும் விதமாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை மருத்துவமனை வளாகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொ) கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் மூசா ஆகியோர் கலந்து கொண்டனர்.