தினமணி 15.09.2009
மாட்டுத்தாவணி பஸ்நிலைய வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தத் தடை .
மதுரை, செப். 14: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய வளாகப் பகுதிக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் பகுதிகள், பிளாட்பார ஓரம், பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன.
இவை 3 அல்லது 4 நாள்கள் கூட நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பஸ் நிலையப் பகுதியில் அனுமதி இல்லாத இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த, மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சில பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
முதல்நாள் சோதனை என்பதால் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களை, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
செவ்வாய்க்கிழமை முதல், பஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.