தினமணி 03.04.2013
நகராட்சி ஆணையரகம், பேரூராட்சி இயக்குரகம் கட்ட ரூ. 25 கோடி
நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்துக்கு நவீன வசதிகளுடன் ரூ. 25 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
9 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 7 நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகங்கள் ஆகியவற்றின் தலைமை அலுலகமாக நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல 529 பேரூராட்சிகள், 16 பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகங்களின் தலைமை அலுவலகமாக பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இவற்றுக்கு, பணியாளர்களுக்கான இட வசதி, அலுவலர்கள் அறை, ஆவண காப்பகம், நூலகம், கூட்ட அரங்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்கள் ரூ. 25 கோடியில் கட்டப்படும்.
ரூ. 6.34 கோடியில் பஸ் நிலையங்கள்: நீலகிரி மாவட்டம் நெல்லியாளம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளில் ரூ.6.34 கோடியில் பஸ் நிலையங்கள் கட்டப்படும்.
பஸ் நிலைய உள்கட்டமைப்புக்கு ரூ.14.72 கோடி: குடியாத்தம், திருவத்திபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம், கரூர், மேட்டுப்பாளையம், பல்லடம், பரமக்குடி, கொமாரப்பாளையம், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையங்களில் கூடுதல் பஸ் நிறுத்தமிடங்கள், பொருள் பாதுகாப்பு அறைகள், நவீன கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 14.72 கோடியில் ஏற்படுத்தப்படும்.
ரூ.14.66 கோடியில் கூடுதல் அலுவலக் கட்டடங்கள்: ஆற்காடு, திருவண்ணாமலை, மேல்விஷாரம், சிதம்பரம், காயல்பட்டினம், ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பவானி, குழித்துறை, உடுமலைப்பேட்டை ஆகிய 10 நகராட்சிகளில் ரூ.14.66 கோடியில் கூடுதல் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றார் அமைச்சர் முனுசாமி.