தினமலர் 05.04.2013
19,26,27 வார்டு மக்கள் 15ம் தேதிக்குள் குடிநீர் இணைப்புகள் அமைக்க வேண்டும்
திருநெல்வேலி:மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 ஆகிய மூன்று வார்டு பொதுமக்கள் வரும் 15ம் தேதிக்குள் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என மேலப்பாளையம் மண்டலம் உதவி கமிஷனர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 19,26,27 வார்டுகளுக்கான புதிய குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் தங்களது குடிநீர் குழாய் இணைப்புகளை பழைய திட்டத்தில் இருந்து மாற்றி புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் ப்ளோ கண்ட்ரோல் வால்வு அமைப்புடன் அமைக்க வேண்டும். பெரும்பாலான வீட்டு இணைப்புதாரர்கள் உரிய கட்டணம் செலுத்தி பழைய திட்டத்தில் இருந்து புதிய திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகளை மாற்றி அமைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எனவே புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடிநீர் குழாய் இணைப்புதாரர்களும் வரும் 15ம் தேதிக்குள் உரிய கட்டணம் செலுத்தி குடிநீர் குழாய் இணைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு உதவி கமிஷனர் ஜோதிலிங்கம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.