தினத்தந்தி 14.04.2013
சென்னையில் இரவு நேரங்களில் குப்பை அள்ளும் பணி மேயர் நேரில் ஆய்வு
சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரவு நேர குப்பை அள்ளும் பணியை மேயர் சைதை துரைசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இரவு நேர ஆய்வு
தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பை எடுக்கும் பணியினை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப்பணி இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றது.இந்த ஆய்வு குறித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:–தமிழக முதல்–அமைச்சர் குப்பை இல்லா சென்னை மாநகராட்சியை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
4,789 மெட்ரிக் டன் குப்பை
சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக, பகல் நேரங்களில் 3 ஆயிரத்து 266 மெட்ரிக் டன் குப்பைகளும், இரவு நேரங்களில் ஆயிரத்து 523 மெட்ரிக் டன் குப்பைகளும் ஆக மொத்தம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 789 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் தமிழக முதல்–அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக கூடுதலாக 8 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக 9 ஆயிரத்து 537 நிரந்தர துப்பரவு பணியாளர்களும், தற்காலிகமாக 570 பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரத்து 806 பேரும் துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
16,913 துப்புரவு பணியாளர்கள்
கடந்த ஆட்சி காலத்தில் 11 ஆயிரம் பேர் மட்டுமே துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது சென்னை மாநகராட்சியில் 16 ஆயிரத்து 913 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.