Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆபத்து விளைவிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் கணக்கெடுப்பு 28 பேருக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்

Print PDF
தினமலர்         03.05.2013

ஆபத்து விளைவிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் கணக்கெடுப்பு 28 பேருக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்


பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலுள்ள அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில், அவசர கால வழி ஏற்படுத்தாதது; உரிய பாதுகாப்பு வசதி இல்லாமலிருப்பது, தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருக்கும் கட்டடங்கள், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டடங்கள் குறித்து, பொள்ளாச்சி நகராட்சி நகரமைப்பு பிரிவு கணக்கெடுத்து வருகிறது.பொள்ளாச்சி நகராட்சி 72 சதுர கி.மீ., பரப்பளவைக்கொண்டது.

இங்கு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். வெளி மாநில மற்றும் மாவட்ட மாணவர்களும் விரும்பிப்படிக்கும் வகையில் கல்லூரிகளும், பள்ளிகளும் இங்கு சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான பொள்ளாச்சியை, திரைப்படத்துறையினர் தேர்வு செய்து அதிக அளவில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். அதற்கேற்ப வசதியான லாட்ஜ்களையும், அடுக்குமாடி கட்டடங்களையும் எதிர்பார்க்கின்றனர்.அதற்கு தகுந்தாற்போல், இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களின் எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது.

இவற்றில் பெரும்பாலானவை அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. அதில் சில அனுமதி பெற்று, அதை மீறி கட்டடப்பட்ட கட்டடங்களும் உள்ளன. இது போன்ற கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவதற்காக நகராட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால் பாதியிலேயே அப்பணியை நிறுத்தி விட்டது. இச்சூழலில், கோவையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டடத்தில் அவசர கால வழி ஏற்படுத்தாததால், வெளியேற முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேர் இறந்தனர்.இச்சம்பவத்தையடுத்து, மாவட்டத்திலுள்ள அனைத்து அடுக்குமாடி கட்டடங்களுக்கும் அவசர கால வழி, தீத்தடுப்பு, தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பொள்ளாச்சியிலுள்ள அடுக்குமாடி கட்டடங்களை நகராட்சி நகரமைப்புஅலுவலர் சவுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலா பாய் உள்ளிட்ட நகரமைப்பு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், நகரில் 28ல் அவசரகால வழி ஏற்படுத்தாமல் இருப்பதும், அதோடு தீத்தடுப்பு மற்றும் தீயணைப்புக்கருவிகள் முறையாக பொருத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. இந்த 28 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது தவிர, மற்ற அடுக்குமாடி கட்டடங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பில் அடுக்குமாடி கட்டட உரிமையாளர்களுக்கான அவசரக்கூட்டம் வரும் 4ம் தேதி நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் அவசரகால வழியின் அவசியம் குறித்தும், தீத்தடுப்பு, தீயணைப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன் கூறுகையில், ""மாவட்ட நகராட்சிகள் சட்டம் 222ன் படி அடுக்குமாடி கட்டடங்களில், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டடங்கள் கட்டப்படக்கூடாது; அதில் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. இதை வலியுறுத்தி போதிய கால அவகாசம் கொடுத்து; 28 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டடங்களுக்கு நோட்டீஸ் தொடர்ந்து வழங்கப்படும்,'' என்றார்.