தமிழ் முரசு 22.04.2013
ரிப்பன் மாளிகை புனரமைப்பு பணிஅக்டோபர் மாதத்தில் முடியும் மேயர் சைதை துரைசாமி தகவல்
சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தை புனரமைக்கும் பணி வரும் அக்டோபர்
மாதத்தில் முடிவடையும் என மேயர் சைதை துரைசாமி கூறினார்.சென்னை மாநகராட்சி
மன்ற சாதாரண கூட்டம், இன்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில்
கூடியது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் விக்ரம் கபூர்,
துணை மேயர் பெஞ்சமின் முன்னிலை வகித்தனர். முதலில் கேள்வி, பதில் நேரம்
தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது:தமிழ்ச்செல்வன் (காங்கிரஸ்):
சென்னை மாநகராட்சி முழுவதும் எத்தனை பொது கழிப்பிடங்கள் உள்ளன? அதில் கட்டண
கழிப்பிடம் எத்தனை, இலவச கழிப்பிடம் எத்தனை, மாநகராட்சியால் நேரடியாக
பராமரிக்கப்படும் கழிப்பிடம் எத்தனை?
மேயர் துரைசாமி:
மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 890 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில்
கட்டண கழிப்பிடம் 102, மாநகராட்சி நேரடி பராமரிப்பில் 846 இலவச மற்றும்
கட்டண கழிப்பிடம் உள்ளது. ஒப்பந்ததாரர்களால் 29 கழிப்பிடம்
பராமரிக்கப்பட்டு வருகிறது. சேதம் அடைந்த நிலையில் 12 கழிப்பிடம் உள்ளது.
சீனிவாசன் (அதிமுக): ரிப்பன் மாளிகை கட்டிடத்தை புனரமைக்கும் பணி எப்போது முடியும்?
மேயர்:
புனரமைக்கும் பணி 2009&ம் ஆண்டு நவம்பர் 16&ம் தேதி
தொடங்கப்பட்டது. இந்த பணிக்கு ரூ.9.55 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 60
சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் கூடுதலாக ரூ.5.8 கோடி
ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் பணிகள்
முடிவடையும். இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.
திமுக வெளிநடப்பு
கேள்வி
நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், அம்பத்தூர்
மண்டல குழு தலைவர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் எழுந்து,
மேயரை சூழ்ந்து நின்று பத்திரிகைகளில் மாநகராட்சி பற்றி வெளிவந்த செய்திகள்
குறித்து பேச அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து
திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
மன்றத்துக்கு
வெளியே சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், ‘’மேயராக மு.க.ஸ்டாலின் மற்றும்
மா.சுப்பிரமணியன் இருந்தபோது சென்னை சிங்கார சென்னையாக இருந்தது. இப்போது
சென்னை சீரழிந்து வருகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது, கொசுத்
தொல்லை அதிகரிக்கிறது. எங்கும் குப்பையாக காட்சி அளிக்கிறது. இதுபற்றி பேச
அனுமதி தரவில்லை. அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். மீண்டும் அவை
நடவடிக்கையில் கலந்து கொள்வோம்’’ என்றார்.