Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பணியில் இருக்கும் போது "பார்வை இழப்பு ஏற்பட்டால், பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது" நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF
தினத்தந்தி        25.05.2013

பணியில் இருக்கும் போது "பார்வை இழப்பு ஏற்பட்டால், பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது" நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு


பணியில் இருக்கும் போது பார்வை இழப்பு ஏற்பட்டால் பதவி உயர்வு அளிக்க மறுக்கக்கூடாது என்று நகராட்சி அலுவலர் தொடர்ந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி அலுவலர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கருங்காட்டான்குளத்தைத சேர்ந்தவர் வி.போஸ்(வயது 52). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:–

சின்னமனூர் நகராட்சியில் 1994–ம் ஆண்டு வருவாய் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். அதன்பின்பு 1995–ம் ஆண்டு நடந்த துறை ரீதியான தேர்வில் வெற்றி பெற்றேன். இதனால் 2000–ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பணியில் இருக்கும் போது எனக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனால் எனக்கு 1995–ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய பதவி உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை. எனக்கு, பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மாற்றுப்பணி


இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.சாமித்துரை, எம்.ஞானகுருநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

சின்னமனுர் நகராட்சி ஆணையாளர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரருக்கு 100 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டதால் அரசு பணிக்கு தகுதி அற்றவர். எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்க முடியாது“ என்று கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–

அரசு பணியில் சேர்ந்த பின்பு மனுதாரருக்கு 100 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது உடல் ஊனம் ஏற்பட்டால் அவரது உடல்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றுப் பணி வழங்க வேண்டும். அவ்வாறு மாற்றுப்பணி வழங்கும் போது அவர் ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தை குறைக்கக்கூடாது.

பதவி உயர்வு மறுத்தது தவறு

அதே போன்று அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை மறுக்கக்கூடாது. இது உடல் ஊனமுற்றோர் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும் போது மனுதாரருக்கு பதவி உயர்வு அளிக்க மறுத்தது தவறு.

மனுதாரருக்கு 1995–ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய பதவி உயர்வை 3 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.