Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது போலீஸ் பாதுகாப்புடன் உணவு வினியோகம் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை

Print PDF
தினத்தந்தி       05.06.2013

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது போலீஸ் பாதுகாப்புடன் உணவு வினியோகம் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை


வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களிலும் நேற்றும் கூட்டம் அலைமோதியது. நேற்று 15,141 இட்லிகள் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.43 ஆயிரத்து 289 வசூல் ஆனது.

அம்மா உணவகங்கள்

வேலூர் மாநகராட்சியில் வேலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்பட 10 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அம்மா மலிவு விலை உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணிவரை ஒரு ரூபாய்க்கு இட்லியும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை ரூ.5–க்கு சாம்பார் சாதம், ரூ.3–க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டம் அலைமோதியது

நேற்று காலை 10 உணவகங்களிலும் நேற்று காலை டோக்கன் பெற கூட்டம் அலைமோதியது. டோக்கன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பகல் 12 மணிக்கு அனைத்து உணவகத்திலும் சாம்பார், தயிர் சாதங்கள் 2 மணிக்குள் விற்று தீர்ந்தன. நேற்று காலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் டோக்கன் வாங்க பொதுமக்கள் முண்டியடித்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து பகலில் 12–15 மணி முதல் சாம்பார், தயிர் சாதங்கள் விற்பனை நடந்தது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றிருந்தனர். இதனால் தெற்கு மற்றும் மகளிர் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை முண்டியடித்து செல்லாமல் 10, 10 பேராக உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கவுன்சிலர் துரையரசன், துப்புரவு ஆய்வாளர் லூர்துசாமி ஆகியோரும் பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்தனர்.

ரூ.43 ஆயிரம் வசூல்

நேற்று 15 ஆயிரத்து 141 இட்லியும், 4 ஆயிரத்து 6 சாம்பார் சாதம், 2 ஆயிரத்து 706 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.43 ஆயிரத்து 289 வசூல் ஆனது. மாநகராட்சி கமிஷனர் ஜானகி கூறுகையில், ‘அம்மா உணவகத்தில் தனியார் அனைத்து டோக்கன்களையும் வாங்கி வினியோகிப்பதாக கூறப்படுகிறது. அதனால் அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மொத்த டோக்கன்களையும் கொடுக்க கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது‘ என்றார்.