தினமணி 21.06.2013
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பராமரிக்க வேண்டுகோள்
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கட்டடங்களில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்குமாறும், இதுவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காதவர்கள் உடனடியாக அமைக்குமாறும் ஆணையர் ஜானகி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு: மாநகராட்சியின் 4 மண்டலங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு குறித்த களப்பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 நாள்களில் 6,592 கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 3,810 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. 2,782 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தும் நல்ல நிலையில் இல்லாதவை 2,286 என கண்டறியப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டும், அவற்றை பராமரிக்காதவர்கள் செப்பனிடும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதுவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காதவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.