Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6,672 விளம்பர பலகைககள் அகற்றம் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               24.06.2013

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6,672 விளம்பர பலகைககள் அகற்றம் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை


மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கையின் பேரில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 6 ஆயிரத்து 672 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

உரிமம் இல்லாமல்...

மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மதுரை நகரின் அழகை சீர்குலைக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைந்து மாநகராட்சி மண்டலம் ஒவ்வொன்றிற்கும் இரண்டு குழுக்களை நியமித்து அந்த பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அகற்றம்

பேரூராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணியினை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த 17–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடந்தது. அதில் மொத்தம் 6 ஆயிரத்து 672 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

சுவர் விளம்பரங்கள்

பொதுமக்களிடம் இருந்து இந்த பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனியார் கட்டிடங்களில் அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விளம்பரங்கள் அரசு அனுமதியின்றி இருப்பதுடன், நகரின் அழகை சீர்குலைப்பதாகவும் உள்ளன. எனவே உடனடியாக சுவர் விளம்பரங்களை, கட்டிட உரிமையாளர்கள் அழிக்க வேண்டும்.

புறம்போக்கு நிலங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் சுத்தம் செய்திட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்த பணியினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்குரிய செலவினத்தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

சொந்த செலவில்...

தனியார் கட்டிடங்களில் விளம்பர பலகை வைப்பதற்கான விளம்பரபலகை தாங்கிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட அளவிலேயே (அதிகபட்ச அளவு 24*12 அடி) இருத்தல் வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள விளம்பரப் பலகை தாங்கிகளை சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.