தினமணி 24.09.2009
கத்திவாக்கம், பெரிய சேமூர் நகராட்சித் தலைவர்கள் நீக்கம்: அரசாணை வெளியீடு
சென்னை, செப். 23: கத்திவாக்கம், பெரிய சேமூர் நகராட்சித் தலைவர்களை பதவியிலிருந்து நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ள ஆணை விவரம்:
திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் நகராட்சித் தலைவர் ஏ. முருகவேலுக்கு எதிராக நகராட்சிக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் 19 பேர் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருந்தனர்.
இதையடுத்து ஏ முருகவேல் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.
ஈரோடு மாவட்டம் பெரிய சேமூர் நகராட்சித் தலைவர் எஸ்.டி. பிரபாகரனுக்கு நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.
எனவே, எஸ்.டி. பிரபாகரன் பெரிய சேமூர் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.