தினகரன் 12.07.2013
மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத புதிய வீடு, கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது
அனுப்பர்பாளையம், : திருப்பூரில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லாத புதிய வீடு, கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாது என மண்டல கூட்டத்தில் உதவி ஆணையர் அறிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்கூட்டம் வேலம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவிஆணையாளர் முகமதுசபியுல் லா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
அனைத்து வார்டுகளிலும், இனி மாதாமாதம், குடிநீர் சப்ளையர்களின் கூட்டம் நடத்தப்பட உள்ளது. 22 கோடி ரூபாய் செலவில், புதிய தெருவிளக்குகள் அமைக்கவும், பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீரை அதிகமாக வழங்க அனைத்து வார்டுகளிலும் ரூ.13.5 கோடியில் குழாய் விஸ்தரிப்பு பணிகள் நடக்கிறது. முதலாவது மண்டலத்தில் 3 இடங்களில் மேல்நிலைத்தொட்டிகளும், தரைமட்ட தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளன. கை பம்ப் போர்வெல் உள்ள இடங்களில், மின்மோட்டார் அமைத்து சப்பைத்தண்ணீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.