தினமணி 24.07.2013
ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தாவிடில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தாவிட்டால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் பி. அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் வார்டு எண் 19, 26 மற்றும் 27 பகுதிகளுக்கான புதிய குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து தமிழக முதல்வரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடிநீர்க் குழாய் இணைப்புகளை புதிதாக அமைக்கப்பட்ட பகிர்மானக் குழாயில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு அமைப்புடன் குடிநீர்க் குழாய் உப விதிகளின் படி இணைக்க வேண்டும்.
பழைய குழாய்களில் இணைப்பு அமைத்துள்ள இணைப்புதாரர்களும் தங்கள் இணைப்புகளில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்த வேண்டும். எனவே, புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து இணைப்புதாரர்களும் இதற்குரிய கட்டணத்தை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 15.8.2013-க்குள் செலுத்தி ப்ளோ கண்ட்ரோல் வால்வு பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர்க் குழாய் இணைப்புகளை துண்டிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு உதவி செயற்பொறியாளரை 9442201305, இளநிலைப் பொறியாளரை 9442201334 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.