Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு காலவாதியான குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் பறிமுதல்

Print PDF

தினத்தந்தி             27.07.2013

தாராபுரம் பஸ் நிலைய கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு காலவாதியான குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் பறிமுதல்

தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

காலவாதியான பொருட்கள்

தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகள் கூட்டத்தை கணக்கில் கொண்டு தாராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை போட்டிபோட்டு ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறார்கள்.

இந்த பஸ் நிலையத்திற்கு வெளியூர் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதால் பஸ் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், மற்றும் இதர பலகாரங்கள் தரமற்றதாகவும், தேதி காலவதியானதாக இருப்பதாகவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமாருக்கு புகார் வந்தது.

அதிரடி ஆய்வு

இதையடுத்து ஆணையாளர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு தாராபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர் ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பிஸ்கட்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களில் தேதி காலவதியாகி இருப்பதும், குடிநீரின் நிறம் மாறி இருப்பதும் அவற்றை பயணிகளிடம் ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பிஸ்கட்டுகள் பறிமுதல்

மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரஸ்க், பிஸ்கட்டுகளில் கடந்த ஜனவரி மாதமே தேதி காலவதியாகி இருந்தது. சிலவற்றில் தயாரிக்கப்பட்ட தேதி எதுவும் இல்லை. இதையடுத்து அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சிலகடைகளில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியது. அவற்றையும் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களை எச்சரிக்கை செய்த ஆணையாளர் அவற்றை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறும் போது:–

பஸ் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து பொருட்களிலும் தயாரிக்கப்பட்ட தேதி, காலவதியாகும் தேதி கட்டாயம் குறித்து இருக்க வேண்டும். லேபிள் இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.