தினமலர் 27.07.2013
நவீன பேருந்து நிழற்குடைகள் திட்டம் பணி ஆணை வழங்க மாநகராட்சி தயார்
சென்னை:சென்னையில், 108 இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் பணி ஆணை வழங்க மாநகராட்சி தயாராகியுள்ளது.
சென்னையில் கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க, தனியாரிடம் வரவேற்பு இல்லாத நிலையில், மாநகராட்சியே பேருந்து நிழற்குடைகளை அமைக்க முன்வந்தது.
அதன்படி, 50 கோடி ரூபாய் செலவில், 500 இடங்களில் நிழற்குடைகள் அமைய உள்ளன. முதல்கட்டமாக, 108 இடங்களில் துருப்பிடிக்காத குழாய்கள் மூலம் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்க, 11 கோடி ரூபாய்க்கு ஐந்து கட்டங்களாக ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.
இதில் மொத்தம் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஒரு நிறுவனத்திற்கு பணிகளை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணி ஆணை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.
அடுத்தகட்டமாக, 100 இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்க ஒப்பந்தம் தயாராகி வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.