தினமணி 01.08.2013
தருமபுரி அரசு மருத்துவமனை, நகராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் புதன்கிழமை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு 500 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடமும், நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் திட்ட விவரங்களை கேட்டறிந்த அவர், திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் பதாகைகளை ஆங்காங்கே இடம்பெறச் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அங்கிருந்த பிறவி குறைபாடு சிகிச்சை மையம், புறநோயாளிகள் பிரிவு, பால்வினை நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு, நோயாளிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
மருத்துவமனைக்கு புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட நவீன உபகரணங்கள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளைக் கேட்டறிந்து, அவற்றை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார்.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகளை விரைந்து கொள்முதல் செய்து மருத்துவமனையில் இடம்பெறச் செய்ய வேண்டும். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகப் பழையக் கட்டடத்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும்.
மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டுமெனில், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி எண் நோயாளிகளின் பார்வைக்குத் தெரியும் வகையில் அனைத்து இடங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. பாரதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆர்.சுரபி, கண்காணிப்பாளர் கே. சிவக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி. விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.
நகராட்சி: இதேபோல, தருமபுரி நகராட்சிக்குள்பட்ட சேலம் பிரதான சாலை, ஆறுமுக ஆசாரி தெரு, பேருந்து நிலைய சுற்றுப் பகுதி, செங்கொடிபுரம், கந்தசாமி வாத்தியார் தெரு, பென்னாகரம் சாலை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், குப்பைகள் இல்லாத நகராட்சியாக தருமபுரியை மாற்றவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.க. வீரணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அ. குருசாமி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.