தினமலர் 02.08.2013
ஏழு நாளில் கட்டட அனுமதி மாநகராட்சியில் இன்று முதல் அமல்
சென்னை:சி.எம்.டி.ஏ.,வில் இருப்பதை போல, சென்னை மாநகராட்சியிலும், விண்ணப்பித்த ஏழு நாட்களில், கட்டுமான அனுமதி வழங்கும் பசுமை வழி திட்டம், இன்று முதல், அமலுக்கு வருகிறது.
சென்னை மாநகராட்சியில், பொதுமக்கள் அதிகமாக அலைந்து திரியும் பல விஷயங்களில் ஒன்று, கட்டுமான அனுமதி. மாநகராட்சி எவ்வளவு தான் ஆன்–லைன் விண்ணப்பம், ஒரு மாதத்தில் கட்டட அனுமதி பெறும் திட்டம் என, பல்வேறு முறைகளை அமல்படுத்தினாலும், கட்டுமான அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வாக, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளதை போல, பசுமை வழியில் கட்டட அனுமதி வழங்கும் சிறப்பு திட்டத்தை, மாநகராட்சி இன்று முதல் அமல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால், எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஏழு நாட்களில் கட்டட அனுமதி கிடைக்கும். ஆனால், அனுமதி வழங்கிய பின், மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வர். அப்போது விதிமீறல் இருந்தால், கொடுத்த அனுமதி திரும்ப பெறப்படும். விதிகளுக்கு உட்பட்டு நடப்பவர்களுக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கட்டட அனுமதி விஷயத்தில் எப்படியாவது லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதே இலக்கு. இதனால் தான் பசுமை வழி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இன்று இந்த திட்டத்தை மேயர் துவக்கி வைக்கிறார். விதிகளை மதிப்பவர்களுக்கு இந்த முறையில் ஏழு நாட்களில் அனுமதி கிடைக்கும். அவர்கள் வங்கி கடன் போன்றவற்றை பெற்று கட்டுமான பணிகளை தொடரலாம். இந்த முறை வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.