தினமலர் 05.08.2013
மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சென்னை:மண்ணடியில், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்த போது, குடிநீர் குழாயில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை அடுத்து, அந்த குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மண்ணடி, பவளக்காரத் தெருவில், பல வீடுகளுக்கு குடிநீர் வினியோகமாகவில்லை என, குடிநீர் வாரியத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதிகாரிகள், தண்ணீர் முறையாக வினியோகமாவதாக தெரிவித்தனர்.
ஆனாலும், பெரும்பாலான வீடுகளுக்கு, 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகமாகவில்லை. இதை அடுத்து, நேற்று காலை, குடிநீர் வாரிய அதிகாரி கள், அந்த பகுதியில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், பவளக்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், குடிநீர் இணைப்பு குழாயில், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவது தெரிந்தது.
இதனால், மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்லாமல் தடைப்பட்டுள்ளது. இதை அடுத்து, தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு குழாயை, குடிநீர் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மூன்று மாதத்திற்கு பின் தான் அவர்கள் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதுகூட பரிசீலனைக்கு பிறகே கிடைக்கும். திருட்டு தொடர்பாக மற்ற வீடுகளிலும் ஆய்வு நடத்தப்படும்’ என்றார்.
பவளக்காரத் தெருவை போல், ராமசாமி தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலும் குடிநீர் திருட்டு நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.