தினமணி 14.08.2013
15 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட, 15 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முருகன் உள்ளிட்ட பணியாளர்கள் கல்லூரி சாலை, அவிநாசி சாலையில் உள்ள மளிகைக் கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் என 35 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் என 15 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்வதோடு, அதை விற்பனை செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.