தினமலர் 21.08.2013
கால்வாய்களில் குப்பைகள் மக்களுக்கு கடும் எச்சரிக்கை
திருநெல்வேலி:கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சிக்குள் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் ஆங்காங்கே பொதுமக்களும், வணிகர்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் வெள்ளக் காலங்களில் மழை நீர் செல்லும் வழியை அடைத்து கொண்டு வெள்ள சேதம் ஏற்படவும், குப்பைகள் மழை நீரில் நனைவதால் துர் நாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான சுகாதார கேடுகள் ஏற்பட காரணமாகிறது.
எனவே, இதுபோன்ற தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் குப்பைகள் கொட்டுவதை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தவிர்க்க வேண்டும். குப்பைகளை அருகில் உள்ள தொட்டிகளில் கொட்ட வேண்டும். இதனை மீறினால் பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.