தினமணி 27.08.2013
சொத்து வரி: கோயம்பேடு வியாபாரிகளுடன் பேச்சு நடத்த முடிவு
கோயம்பேடு கடைகளுக்கு சொத்து வரி விதிப்பது தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த 16 ஆண்டுகளாக செலுத்தாத வரி பாக்கியையும் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்தது. ஆனால் இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் வியாபாரிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் மண்டல அளவிலான அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.