தினகரன் 03.09.2013
ரூ.37லட்சத்தில் 45 இடங்களில் ஏர்வால்வு பொருத்த முடிவு
பொள்ளாச்சி நகரில், அழுத்தம் தாங்க முடியாமல் தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீர் அதிகளவு விரயமாகிறது. இதை தடுக்க 45 இடங்களில் ஏர்வால்வு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் பிரதான குழாய்கள் மூலம், நகராட்சிக்குட்பட்ட வெங் கடேசா காலனி, ஜோதிநகர், டி.கோட்டாம்பட்டி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்தேக்க பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேல்நிலைதொட்டிகளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், மேல்நிலை தொட்டியிலிருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. குழாய் உடைப்பால் தண்ணீர் அதிகளவு விரயமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட இடங்களில், அடுத்தடுத்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்படும் குழாயை சீரமைக்க நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், மீண்டும் அதே பகுதியில் உடைப்பு எற்பட்டு தண்ணீர் விரயமாகிறது.
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி சரியில்லாததால், குடிநீர் குழாய் அடுத்தடுத்து உடைப்பு ஏற்படுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாவதை முழுமையாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க, முக்கிய இடங்களில் ஏர்வால்வு பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெங்கடேசா காலனி, கோவை ரோடு, எஸ்.எஸ்.கோயில் வீதி, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 45 இடங்களில் ஏர்வால்வு பொருத்தப்படுகிறது. அதுபோல் தாழ்வான இடத்தில் கவர்வால்வு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அரசு மானியமாக ரூ.37லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டென்டர் விடப்பட்டு ஏர்வால்வு மற்றும் கவர்வால்வு பொருத்தும் பணி துவங்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.