தினகரன் 05.09.2013
ரூ 469 கோடியில் நடக்கும் தனி குடிநீர், பாதாள சாக்கடை பணிகளை உலக வங்கி குழு ஆய்வு
சேலம், : சேலத்தில் ரூ 469 கோடி மதிப்பில் நடந்து வரும் தனி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சி பகுதியில் ஞி320 கோடி மதிப்பில் தனிக்குடிநீர் திட்ட பணியும், ரூ 149 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணியும் உலக வங்கி கடன் வசதியுடன் நடந்து வருகிறது. இந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது? என உலக வங்கி குழுவினர் சேலம் மாநகர பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
டெல்லியில் இருந்து வந்த இக்குழுவில் மோகன், ராகவா, ரகுகேசவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களுடன் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதி நிறுவன பிரதிநிதி ராஜேந்திரன், இன்ஜினியர் வைத்தீஸ்வரன், ஜஸ்டின், கார்த்திக் ஆகியோரும் வந்தனர். இவர்கள், சேலம் மாநகர பகுதியில் நடந்து வரும் தனிக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி ஆகியவற்றையும், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் தனிக்குடிநீர் திட்டத்திற்காக ஓமலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்க வேண்டியிருக்கும் பகுதியை ஆய்வு செய்தனர். அதன்பின் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதில், பணி நிலைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, மேயர் சவுண்டப்பன், கமிஷனர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் காமராஜ், அசோகன், வெங்கடேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.