மாலை மலர் 19.09.2013
![சென்னை மாநகராட்சியில் போலி சான்றிதழ்: ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம் சென்னை மாநகராட்சியில் போலி சான்றிதழ்: ஆசிரியர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம்](http://mmimages.maalaimalar.com/Articles/2013/Sep/7e1587d0-eafa-4ad2-ad27-3e79612edbb3_S_secvpf.gif)
சென்னை மாநகராட்சி பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் சமீபத்தில் வெளியானது. இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 76 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யபட்டன. அவற்றில் 9 பேரின் சான்றிதழ்கள் போலி என உறுதியாகி உள்ளது.
இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் வரை பல்வேறு போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர். 5 ஆசிரியர்கள் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
பிளஸ்–2 தேர்வில் 4 பேர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர். 6 ஆசிரியர்கள் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்றதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. 9 ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து ஓரிரு நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.