Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

‘மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை’ மன்ற கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

Print PDF

தினத்தந்தி             20.09.2013 

‘மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை’ மன்ற கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு

 

 

 

 

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

அவசர கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா கூடத்தில் நேற்று மதியம் நடந்தது.கூட்டத்துக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம் வருமாறு:–

மேயர் செ.ம.வேலுச்சாமி:– கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதற்கு 17 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கொட்டப்படும் கட்டிட இடிபாடுகளை மறு சுழற்சி முறையில் கட்டுமான உபயோக பொருட்களாக மாற்ற தனியார் நிறுவனத்துடன் பேசி வருகிறோம்.அந்த நிறுவனத்துக்கு கழிவு நீர் பண்ணை இடத்தில் இடம் கொடுக்க மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.மாநகராட்சி ஏற்கனவே குறிப்பிட்ட 17 இடங்களை தவிர மற்ற இடங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமர்வு படியை உயர்த்த வேண்டும்

ஆணையாளர் லதா:–பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மாநகராட்சியின் 6 நகர் நல மையங்களில் செய்யப்படுகின்றன.இதற்கான மருந்துகளை தற்காலிகமாக மாநகராட்சி நிதியிலிருந்து வாங்கிக் கொள்ளுமாறு அரசு கூறியுள்ளது.அதன் பின்னர் அரசு நிதி ஒதுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

ராஜேந்திரன்(நியமன குழு உறுப்பினர்):–கவுண்டம்பாளையம்–வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும் பகுதிகளுக்கு பில்லூர் 2–வது குடிநீர் திட்டத்திலிருந்து கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கூடுதல் தண்ணீரை எடுக்கும் பணி பவானி அருகே உள்ள மருதூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொண்டால் கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யலாம்.

செந்தில்குமார்(நகரமைப்பு குழு தலைவர்):–கவுன்சிலர்களின் அமர்வு படியை உயர்த்த வேண்டும்.வளர்ச்சித்திட்டங்களில் மற்ற மாநகராட்சிகளுக்கு நமது மாநகராட்சி முன்னோடியாக இருப்பதை போன்று அமர்வுபடி வழங்குவதிலும் நாம் முன்னோடியாக விளங்க வேண்டும்.

மயானம் அமைக்க அனுமதி

ராமமூர்த்தி:–வார்டுக்கு ஒரு நூலகம் என்ற திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேயர் செம.வேலுச்சாமி:–தற்போது 19 இடங்களில் உள்ள பழைய கட்டிடங்களில் நூலகம் அடுத்த மாதத்துக்குள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.அதை தொடர்ந்து மற்ற வார்டுகளிலும் நூலகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும்.சரவணம்பட்டி அம்மா உணவகத்துக்கு தேவையான கியாஸ் அழுகிய காய்கறிகளிலிருந்து தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல சொக்கம்புதூரில் அழுகிய காய்கறிகளிலிருந்து கியாஸ் தயாரித்து அதன் மூலம் செயல்படும் மயானம் அமைக்க ரூ. 95 லட்சம் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொகையை அரசிடமிருந்து பெற கடிதம் அனுப்ப மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கணபதி ராஜ்குமார்(மண்டல தலைவர்):–மாநகராட்சிக்கு சொந்தமான பொது பயன்பாட்டு இடத்தை (ரிசர்வ் சைட்) பலர் ஆக்கிரமித்து விட்டு அதை மீட்க செல்லும்போது தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

மேயர் செ.ம.வேலுச்சாமி:–கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 500 பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டு அதற்கான இடத்தை தேடும்போது தான் ரிசர்வ் சைட்டுகள் பற்றி வெளியே தெரிகிறது.ஏற்கனவே உள்ள 60 வார்டுகளில் பொது பயன்பாட்டு இடங்களை மீட்பதில் சிரமம் இல்லை.ஆனால் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் தான் பொதுபயன்பாட்டு (ரிசர்வ்) இடங்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது.இதற்கு காரணம் ரிசர்வ் இடங்கள் பற்றி சரியான ஆவணங்கள் இல்லாதது தான்.எனவே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்பதிலும் அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அழுகிய காய்கறிகளை கொண்டு தயாரிக்கும் சமுதாய கியாஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் அது செயல்படுத்தப்பட்ட பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

இதைதொடர்ந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கூடுதலாக சேகரமாகும் 500 டன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் அமைக்க பெங்களூரை சேர்ந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவது என்பன உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.