தினமலர் 23.09.2013
‘அம்மா’ உணவக ஊழியர்களுக்கு ஒரே வண்ண சீருடை தலை, கைகளுக்கு உறை அணியாவிட்டால் நடவடிக்கை
சென்னை:மலிவு விலை உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஒரே வண்ணத்தில் சீருடை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள மலிவு விலை உணவகங்கள் குறித்து தி.நகர்., சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று மாலை மேயர் சைதை துரைசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
உணவகங்களில் சுகாதாரம் மிக முக்கியம்.
தலை, கைகளுக்கு கவசம் அணியாமல் பணிபுரிந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
உணவகங்களை மேம்படுத்த, ஊழியர்கள் கேட்கும் வசதிகளை மண்டல அதிகாரிகள் செய்து தர வேண்டும். தவறினால் நிர்வாக நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
உணவக ஊழியர்களுக்கு ஒரே வண்ணத்தில் சீருடை விரைவில் வழங்கப்படும்.
எலி தொல்லை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். உணவகம் அருகில் தினமும் ‘பிளீச்சிங்’ பொடி துாவ வேண்டும்.
இவ்வாறு பல்வேறு ஆலோசனைகளை மேயர் வழங்கினார்.