தினமலர் 27.09.2013
காந்திமார்க்கெட் எதிரில் இடையூறு 8 கடை அகற்ற மாநகராட்சி முடிவு
திருச்சி: திருச்சி காந்திமார்கெட் எதிரே உள்ள கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. திருச்சி காந்திமார்கெட் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான தகர கூரைகளால் ஆன 12 கடைகள் இருந்தன. இவை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டு வந்தது.
காந்திமார்க்கெட் பிரதான நுழைவு வாயில் எதிரே உள்ள போர் தியாகிகள் நினைவிடத்திற்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கிருந்த 4 கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. தற்போது அங்கு 8 கடைகள் உள்ளன. வெல்லமண்டி சாலையில் இருந்து காந்திமார்கெட்டிற்கு திரும்பும் பகுதியில் இந்த கடைகள் அமைந்துள்ளதால் டவுன் பஸ்கள், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக உள்ளது. அதோடு கடைகளுக்கு வருபவர்களின் வாகனங்கள் ரோடில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இந்த கடைகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 55 ஆயிரத்து 104 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எனினும் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதால், இந்த 8 கடைகளையும் அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மூன்று மாத கால அவகாச அடிப்படையில் வியாபாரிகளை கடையை காலி செய்ய வலியுறுத்தி விரைவில் நோட்டீஸ் வழங்ப்படவுள்ளது.