தினமலர் 01.10.2013
பொதுப்பணி துறை கால்வாயில் கட்டுமான பணி தடுத்து நிறுத்தியது பேரூராட்சி நிர்வாகம்
பொதுப்பணித் துறை கால்வாயில் தனியார் மேற்கொண்ட, கட்டுமானப் பணியை பேரூராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.
சென்னை புழலேரி மதகு பகுதியில் இருந்து துவங்கும் பொதுப்பணித் துறை உபரி நீர் வடிகால்வாய் 8.3 கி.மீ., நீளம், 50 முதல் 70 மீட்டர் அகலம் கொண்டது.
உபரி நீர்
இது வடகரை, கிராண்ட்லைன், புழல் பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், ஆ.முல்லைவாயல், சடையங்குப்பம், மணலி வழியாக எண்ணூர் கடல் பகுதியில் இணைகிறது.
பருவ மழைக்காலத்தில், புழலேரி நிரம்பும் நிலையில் வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் மழை வெள்ளநீர் இந்தக் கால்வாய் வழியாக எண்ணூர் கடலுக்கு செல்லும்.
கடந்த சில ஆண்டுகளாக கால்வாய் ஆங்காங்கே சிறிது சிறிதாக தனியாரின் கட்டுப்பாட்டில் சென்று கட்டடங்களும் உருவாகி உள்ளன.
இதனால் ஒரு சில பகுதிகளில் கால்வாய் 20 மீ., அளவிற்கு சுருங்கி விட்டது. மழைக்காலத்தில் அந்தப் பகுதிகளில் வெள்ளநீர் கரை மீறி, குடியிருப்புகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. பொதுப்பணித் துறையின் அலட்சியம்தான், தனியாரின் ஆக்கிரமிப்பில் கால்வாய் சிக்குவதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆவணங்கள்
சமீபத்தில், செங்குன்றம் ஆடு அடிக்கும் கூடத்திற்கு பின்புறம், உள்ள பொதுப்பணித் துறை கால்வாயின் மையப்பகுதியில் கட்டுமான பணி நடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் விப்ரநாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு நடந்த கட்டுமானப் பணியை தடுத்தனர். அப்போது அங்கு வந்த சிலர், இது தங்களுக்கு சொந்தமான இடம் என்றும், அதற்குரிய ஆவணங்கள் இருப்பதாகவும் கூறி அவற்றைக் காட்டினர்.
பணி நிறுத்தம்
ஆனால், இந்தப் பகுதி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வழித்தடமாக இருந்து வருகிறது. திடீரென ஆவணத்தைக் காட்டி, கால்வாயின் குறுக்கில் கட்டடம் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், மழைக்காலத்தில் புழலேரி நிரம்பி திறந்து விடப்பட்டால் வெள்ளம் வடிந்து செல்ல வழியின்றி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, கட்டுமானப் பணியை நிறுத்தினர்.
இதுகுறித்து, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கட்டுமானப் பணியை நிரந்தரமாக அகற்றாவிட்டால், மழைக்காலத்திற்குப் பின் அங்கு பணி தொடரவும் வாய்ப்புண்டு, என்றார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.