தினமலர் 04.10.2013
ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை நிலம் மீட்பு சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சேலம்: சேலம் தோப்புக்காட்டில், ஆக்கிரமிக்கப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஓடை நிலத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
ஏற்காடு மலைப்பகுதியில், கனமழை பெய்யும்போது, மழை நீர் முழுவதும் சாரதா கல்லூரியை ஒட்டியுள்ள ஓடையின் வழியாக சென்று, பள்ளப்பட்டி ஏரியிலும், திருமணிமுத்தாற்றிலும் கலக்கும். சமீபகாலமாக தோப்புக்காடு பகுதியில், கிளை ஓடையில் தண்ணீர் செல்லும் பாதையை சிலர் முற்றிலும் ஆக்கிரமித்து, அங்கு மண்ணை கொட்டி நிலம் போல் மாற்றிவிட்டனர். மழை நீர் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்த ஆக்கிரமிப்பு ஓடையில் உள்ள மண்ணை அகற்றுமாறு, கமிஷனர் அசோகன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இன்ஜினியர்கள் ஆய்வு செய்து, 60 அடி அகலமும், 341 அடி நீளமும் கொண்ட நீரோடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது உறுதியானது. கமிஷனர் உத்தரவின் படி, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஓடை நிலம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கு கால்வாய் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி நடவடிக்கையால், தோப்புக்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.