தினமலர் 07.10.2013
அம்மா உணவகத்தில் ஆய்வு: அதிகாரிகளுக்கு புது உத்தரவு
சேலம்: அம்மா உணவகங்களில், ஆய்வு பணிக்கு செல்லும் அதிகாரிகள், கையுறை, கேப் ஆகியவற்றை அணிந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 10 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அம்மா உணவகங்களில், சாப்பாட்டின் தரம் குறையாமல் வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் நடவடிக்கைகள், பொருட்கள் வைப்பு அறை, சாப்பாட்டின் தரம் ஆகியவற்றை, அடிக்கடி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில், பொறியாளர் பிரிவு அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், கைறை, கேப் ஆகியவற்றை அணிந்தே உள்ளே செல்ல வேண்டும். மேலும், சமையல் செய்யும் இடத்துக்குள் செல்லும் போது, காலணிகளை வெளியில் விட்டுச் செல்ல வேண்டும், எனவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகல், அனைத்து மாநகராட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.