தினமலர் 15.10.2013
விரிவாக்க பகுதிகளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடிகால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை
சென்னை : விரிவாக்க பகுதிகளில், 1,133 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால்வாய் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, 4,000 கோடி ரூபாய் மதிப்பில், மாநகராட்சி, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது. 67 சதவீதம்சென்னையில், பழைய மண்டல பகுதிகளில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 747 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில், 67 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள பணிகளை, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதையடுத்து, மாநகராட்சி நடத்திய ஆய்வில், விரிவாக்க பகுதிகளில், 1,133 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட வேண்டும் என, கணக்கிடப்பட்டு ள்ளது.
இதில், மணலி, மாதவரம், திருவொற்றியூர் மண்டலங்களில் கொசஸ்தலை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில், 435 கி.மீ., துாரத்திற்கும், வளசரவாக்கம், அம்பத்துார் மண்டலங்களில் கூவம் ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில், 190 கி.மீ., துாரத்திற்கும், அடையாறு நீர்பிடிப்பு பகுதிகளான, ஆலந்துார், வளசரவாக்கம் மண்டலங்களில், 85 கி.மீ., துாரத்திற்கும், கோவளம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளான பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 373 கி.மீ., துாரத்திற்கும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கு, 4,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த கால்வாய் பணிகளுக்கு மாநகராட்சி விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்த பின், விரிவாக்க பகுதிகளில் பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு
இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமலாக இருப்பதால், தற்போது சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளில், சில பணிகளை ஒத்தி வைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
எந்தெந்த சாலைகளில் பணிகள் தாமதமாகும் என்பது இறுதி முடிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.