தினமலர் 22.10.2013
மழை பாதிப்பை தவிர்க்க குழுக்கள் மாநகராட்சி கமிஷனர் தகவல்
கோவை :மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளவும், நோய் பரவாமல் பாதுகாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார். மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது: மாநகராட்சி எல்லைக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்கும் ரோடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மழை காலம் முடியும் வரையிலும், பாதாள சாக்கடை, மழை நீர்வடிகால் பணிக்காக சாக்கடைகளை அடைப்பு ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் நிறைவு செய்யப்பட்ட பகுதிகளில், மழை நீர் வெளியேறுவதற்கு துவாரம் விடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் குப்பை கொட்டாமல் இருப்பதற்காக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வர்ணம் அடிக்கப்படுகிறது. சாக்கடைகளை தூர் வாருவதற்கு 665 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால உடனடி மீட்பு பணிக்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டில் மரம் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான உபகரணங்களுடன் 24 மணி நேரமும் முன்னெச்சரிக்கையாக இருக்க குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.