தினமலர் 25.10.2013
நெல்லை டவுனில் 41 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக் ஆயிரம் கிலோ பறிமுதல் மாசு கட்டுப்பாடு-மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு!
திருநெல்வேலி:நெல்லை டவுனில் 41 மைக்ரான் அளவிற்கு குறைவாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் கடை பெயர் குறிப்பிடாத பிளாஸ்டிக் பைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் சுயம்பு தங்கராஜ், உதவிப் பொறியாளர் கனகமணி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் பாலகணேசகுமார், ஆய்வாளர்கள் அரசகுமார், முருகன், ஆறுமுகம், வேலாயுதம், பெருமாள் உள்ளிட்டோர் நெல்லை டவுன் பகுதிகளில் மொத்த பிளாஸ்டிக் விற்பனைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 41 மைக்ரான் அளவிற்கு குறைவாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கடை பெயர் குறிப்பிடப்படாத பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே கடையில் ஒரே லாரி அளவிற்கான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 100 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 4 கடைகளில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.