தினமலர் 24.10.2013
கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்
பொள்ளாச்சி : 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு விதி மீறி பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதனை தடுக்கும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடைகளில் சோதனையிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவின்பேரில், கமிஷனரின் நேர்முக உதவியார் சரஸ்வதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சத்யன், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, தனபால், சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பொள்ளாச்சியில் கடைவீதி, தெப்பக்குளம் வீதி, காந்தி மண்டபம் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடக்கும் கடைகளில் அதிரடி சோதனை நேற்று நடத்தினர்.
இதில், ஒன்றரை டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.