தினகரன் 25.10.2013
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கோபி,:கோபி பகுதியில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் சுற்றுப்புற சுகாதார கேடு ஏற்படும் என்பதாலும், இதை எளிதில் அழிக்க முடியாது என்பதாலும் 40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் நகராட்சி சுகாதராத்துறை அதிகாரிகள் அடிக்கடி கோபி பகுதியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதுடன், கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோபி நகராட்சி சுகாதார அலுவலர் ராம் குமார் தலைமையில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியளர் அருண்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நெந்தில்குமார், தமிழ்ச்செல்வன், சையத்காதர் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோர், மளிகைகடைகள், உணவகங்கள் என 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். சோதனையில் 40 மைக்ரானுக்கும் குறைவான 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதனை விற்ற கடை உரிமையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனி யாராவது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்களுடைய கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுகாதார அலுவலர் ராம்குமார் எச்சரித்துள்ளார்.
பவானி: பவானி நகராட்சி பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் நீலமேகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.