தினகரன் 25.10.2013
மாநகரில் அதிகாரிகள் ரெய்டு 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
திருப்பூர், : திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனையிட்டு தடை செய்யப்பட்ட 2 டன் பாலித்தீன் பை களை பறிமுதல் செய்தனர்.
ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து ள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், இத்தகைய பாலித்தீன் பைகள், ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 22ம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மாவட்டம் முழுவதும் 24ம் தேதி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை தொடர்பாக சோதனையிடுமாறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திருப்பூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மலையாண்டி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மணிவேல், வனஜா, மாநகராட்சி நகர் நல அலுவலர் செல்வக்குமார், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர் திருப்பூர் அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, மரக்கடை வீதி, பழைய பஸ் நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள், ஓட்டல்கள், பேக்கிரி கடைகளில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 2 கடைகளுக்கு முறையே ரூ.3000, ரூ.2000 என அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த விற்பனை கடையில் இருந்து பரிசோதனைக்காக சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடை மீது வழக்கு தொடர இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.