தினமலர் 31.10.2013
பூவராகசுவாமி கோவிலில் சிமென்ட் தளம் பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் பார்வை
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்புறம் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு தமிழக புராதான கோவில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 லட்சம் ரூபாய் செலவில் 50 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது.
தற்போது கோவில் முன்புறம் உள்ள வளாகம் முழுவதும் 30 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் கற்களால் புதிதாக தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் ராமநாதன் பார்வையிட்டார்.
அப்போது, கோவில் வளாகத்தின் முன்புறம் வாகனங்கள் வந்து திரும்ப முடியாத நிலையில் குறுகலாக இருந்த பகுதிகளிலும் சிமென்ட் தளம் அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். உதவி செயற்பொறியாளர் குமரகுரு, பொறியாளர் சீனுவாசன், செயல் அலுவலர் அருள்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.