தினகரன் 04.11.2013
வீடுகளில் ஆய்வு நடத்தி கையெழுத்து வாங்கி வந்தால்தான் மலேரியா தொழிலாளருக்கு சம்பளம்
சென்னை, : வீடுகளில் ஆய்வு செய்து, கையெழுத்து வாங்கி வந்தால்தான் மலேரியா தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
மேயர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
மாநகரத்தில் 236 மருத்துவமனைகளிலிருந்து அறிக்கைகள் பெறப்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னையில் உள்ள 17 லட்சம் வீடுகள் 3200 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறு வட்டமும் சுமார் 500 வீடுகளை கொண்டது. ஒவ்வொரு சிறு வட்டத்திற்கும் அனைத்து கொசு தடுப்பு வேலைகளை செய்ய ஒரு மலேரியா தொழிலாளி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் 80 ஆயிரம் வீடுகள் இப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வு செய்யும் பணியாளர்கள் வீடுகளில் உள்ளவர்களிடம் ஆய்வு செய்த தற்கான கையெழுத்தை வாங்க வேண்டும். கையெழுத்து வாங்கினால்தான் அந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் டெங்கு மற்றும் கொசுவினால் பரவும் நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிங் நோய் தடுப்பு மருத்துவ நிலையத்துடன் இணைந்து டெங்கு நோய்க்கான பரிசோதனை முடிவுகளை அன்று மாலையே தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.