தினகரன் 09.11.2013
குடிநீரில் கழிவுநீர் கலந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை
மதுரை, : மாநகராட்சி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். ஆணையாளர் (பொறுப்பு) லீலா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மேயர் பேசுகையில், “அனைத்து அலுவலர்களும் கோப்புகளை முறையாக கையாள வேண்டும். வார்டு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் தொலைபேசி எண்ணையும், குடிநீர் விநியோகிக்கும் கால அட்டவணை ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் முன்னேற்பாடாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், மயானங்களில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சில பகுதியில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக புகார் வருகிறது. அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி குடிநீரில் கழிவு நீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். இனி வரும் காலத்தில் இது போன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணிகளையும், கொசு ஒழிப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள் தேவதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.