தினமணி 09.11.2013
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தா.ஜான்சிராணி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய அலுவலகம் கட்டும் பணி மற்றும் பேரூராட்சியில் நடைபெறும் பிற திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தா.ஜான்சிராணி நேரில் ஆய்வு செய்தார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை கட்டி முடிப்பது குறித்த பணி ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பராமரிக்கப்படும் சுகாதார வளாக கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகள் கழிப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், மேட்டுக் காலனி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனா வழங்கினார்.
பேரூராட்சி தலைவர் வெ.முத்துகுமரன், செயல் அலுவலர் மணிவேல் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.