தினகரன் 13.11.2013
இடப்பற்றாக்குறையை சமாளிக்க விறகு பேட்டை வளாகத்திற்கு மாறும் வாழைக்காய் மண்டி
திருச்சி, : திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் காந்திசந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன ஆட்டு இறைச்சி கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கூடத்தை மேயர் ஜெயா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், விறகுபேட்டை அம்மா உணவகம் அருகில் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பேர் சமைக்க கூடிய அளவில் சமுதாய சமையல் கூடம், காய்கறிகள் கழிவில் இருந்து எரிவாயு மூலம் சமையல் கூடம் விரைவில் அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், தற்போது இயங்கி வரும் வாழைக்காய் மண்டியின் இட பற்றாக்குறையின் காரணமாக விறகு பேட்டை வளாகத்தில் கட்டிடம் கட்ட உத்தரவு விட்டார்.
இபி ரோடு பகுதியில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற லாரி ஓட்டுனர்கள் தங்குவதற்கு தங்கும் அறை, குளியல் அறை, கழிப்பறை மற்றும் லாரிக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் சிறிய அளவில் அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பின் மேயர் ஜெயா கூறுகையில், மாநகரின் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் காந்தி சந்தை பகுதியில் செயல்படும் வெங்காய மண்டியை பொன்மலை கோட்டம் செங்குளம் பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே 0.75 ஏக்கரில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது.
மீதி உள்ள 1.75 ஏக்கரில் வெங்காய மண்டி மொத்த வியாபார சந்தையினை கொண்டு வரவும், இந்த இடத்தில் 3அடுக்கு வணிக வளாகங்கள் கட்டவும் அதில் தரை தளத்தில் வாகனம் நிறுத்தத்துடன் கூடிய தினசரி சந்தை ஆகியவை படிப்படியாக இப்பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் எனவும், இதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
ஆய்வின்போது நகல்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.