தினகரன் 18.11.2013
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் மழை வெள்ள பாதிப்பு மேயர், ஆணையர் ஆய்வு
சென்னை, : மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் தண்ணீர் தேங்கியிருந்த ஆற்காடு சாலை (வடபழனி பஸ் நிலையம் எதிரில் மற்றும் விஜயா மருத்துவமனை எதிரில்) மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி சுதந்திர தின பூங்கா அருகில் உள்ள பள்ளி சாலை ஆகிய பகுதிகளை மேயர் சைதை துரைசாமி, ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றவும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் உறிஞ்சி வெளியேற்றவும், தண்ணீர் தேங்கும் இடங்களில் அதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்றி, அடுத்து மழை பெய்யும் பொழுது தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், 2011ல் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தில் 291 இடங்களில் தண்ணீர் தேங்கியது. தற்பொழுது பெய்துள்ள கனமழைக்கு 98 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது என்று மேயர் கூறினார்.
மண்டல இணை ஆணையர் (தெற்கு) ஆனந்தகுமார், துணை ஆணையாளர் ஆனந்த், மண்டலக்குழு தலைவர் எல்.ஐ.சி. எம்.மாணிக்கம் உடன் இருந்தனர்.