தினகரன் 18.11.2013
மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை
கோவை, : கோவை மாநகராட்சி வதை கூடத்தில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் தேவாங்கபேட்டை, உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோடு, உப்பிலிபாளையம் பகுதியில் வண்டி மாடுகள் உள்ளன. காங்கயம் இனத்தை சேர்ந்த இந்த மாடுகள் குப்பை வாகனங்கள் இயக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கோமாரி நோய் வேகமாக பரவி வரும் நிலையில், மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் அசோகன் தலைமையில் நேற்று முன் தினம் 46 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மாடுகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. அசோகன் கூறுகையில், ‘‘சத்தி ரோட்டில் உள்ள மாடு வதை கூடத்தில் தினமும் 30 முதல் 50 மாடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மாடுகளை ஒரு நாளுக்கு முன்பே நோய் உள்ளதா என பரிசோதனை செய்து வருகிறோம். கோமாரி நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்தால் அந்த மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.