தினமலர் 22.11.2013
திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும்: மாநகராட்சி உறுதி
திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு பகுதிக்கு பல மாவட்டங்களில் இருந்து வெளிமாநில மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதனால் இந்த பகுதியை சுகாதாரமாக பராமரிக்கவும், தேவையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இங்கு ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட உள்ளது. மேலும் 11 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கழிப்பிட இடத்தையும், கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறியதாவது: கண்காணிப்பு கோபுர கட்டடத்தில் கலை அம்சம் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்கவும், சுய உதவி குழு மூலம் திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல் மையமும் அமைக்கப்படவுள்ளது. பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே ஆண்களுக்கு இரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும், பெண்களுக்கு ஒரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும் உள்ளது. கழிப்பிடங்கள் மைக்ரோ ஆர்கனிஸம் எனும் தண்ணீர் கலந்த மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் அனைத்து பகுதியிலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க, முக்கிய இடங்களில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.