Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

Print PDF

தினகரன்              25.11.2013

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

மதுரை, : சந்தை கண்காணிப்பாளர்கள் 4 பேர் மாற்றத்தை தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் இருந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட்கள், நவீன கழிப்பிடங்களை டிச.5ல் மீண்டும் ஏலம்விட புதிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி பொறுப்பிலுள்ள மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களுக்கு 2012 மார்ச்சில் ஏலம் விடப்பட்டது. இதில் விரும்பிய அனைவரும் ஏலம் கேட்க அனுமதிக்கப்படவில்லை. யாருக்கு ஏலம் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூடுதல் தொகைக்கு ஏலம் போகவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் கேட்க வந்த சிலருக்கும் உரிமம் கிடைக்கவில்லை.

இப்படி பல்வேறு குளறுபடிகளால் 30 இனங்களுக்கு யாருக்கும் உரிமம் வழங்க முடியாத நிலையில், மாநகராட்சியே நேரடியாக ஊழியர்கள் மூலம் வசூ லிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்தந்த மண்டலங்களில் பணியாற்றி வந்த சந்தை கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் இப்பணி ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதில் குறைந்த தொகையே வசூலானதாக மாநகராட்சிக்கு கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றது.

புதிய ஆணையராக கிரண்குராலா பொறுப்பேற்றதும், முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களி லும் சந்தை கண்காணிப்பாளர்களை மாற்றி, பொறுப்புகளை மண்டல உதவி வருவாய் அலுவலர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இருந்தபோதும் அவர்கள் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. இதனால் அந்த பணிகளை உதவி வருவாய் அலுவலர்கள் கையில் எடுத்துக் கொள்ளும்படி ஆணையர் கூறிவிட்டார். இதன்படி உதவி வருவாய் அலுவலர்கள் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்கள் கவனித்து வந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களை மீண்டும் டிசம்பர் 5ல் ஏலம் விட ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதில் புதூர் மார்க்கெட், பெரியார் பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்ட்,  வெள்ளைக் கண் தியேட்டர் அருகிலுள்ள மார்க்கெட், செல்லூர் அகிம்சாபுரம் மார்க்கெட், ஜம்புரோபுரம், ஜெய்கிந்துபுரம் மார்க்கெட், திருப்பரங்குன்றம் கோவில் அருகிலுள்ள டூவீலர் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் ஈகோ பார்க் ஸ்டாண்ட், படகுதுறை உளளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த ஏலங்களை முறையாக நடத்த ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனுமதி இல்லா கடைகளுக்கு பெட்டி தயாரிப்பு

மாநகராட்சி சார்பில் புதிதாக கடைகள் வைக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு, இட மாற்றம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் சுமார் 200 பெட்டி கடைகள் எந்தவித அனுமதியுமின்றி பெருகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் அனுமதி பெறாத பல்வேறு கடைகளுக்கு பெட்டிகள் தயாராகி வருகின்றன.