Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்            28.11.2013

மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
 
மழைநீர் சேகரிப்பு மீண்டும் தீவிரமாகிறது: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவ. 28 - சென்னை நகரின் தண்ணீர் தேவையில், நிலத்தடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை குடிநீரின் தேவைக்கு ஏரிகளில் தண்ணீர் சேகரித்து பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வாரியம் இத்தண்ணீரை குழாய் மூலமும், லாரிகளிலும் சப்ளை செய்கிறது.

வீட்டு தேவைகளுக்கு வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. மழைநீரை முறைப்படி சேமிக்காவிட்டால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால் நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே தமிழக அரசு மழைநீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மழைநீர் சேமிப்பை அதிகரிப்பது குறித்து சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சென்னை நகரிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இருக்கும் சிறிய நீர்நிலைகள், குட்டைகளை புதுப்பித்து மழைநீரை வீணாக்காமல் சேமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 429 சதுர கிலோமீட்டர் பகுதியில் மழை நீர் சேமிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை பகுதியில் 100–க்கும் மேலான சிறிய குட்டைகள் உள்ளது. இதில் 19 குட்டைகளை குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்க உள்ளது. மீதம் உள்ள மழைநீர் சேமிப்பு பகுதிகளை சென்னை மாநகராட்சி புதுப்பிக்க முடிவு செய்து இருக்கிறது.

மாநகராட்சி பகுதியில் எங்கெல்லாம் மழைநீர் சேமிப்பு குட்டைகள் அமைக்கலாம். மழைநீரை வீணாகாமல் ஒரு பகுதியில் சேமித்து வைக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மழைநீர் சிறிய குட்டைகளில் சேமிக்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான காலி நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால் அதை மீட்டு மழைநீரை சேமிக்க பயன் படுத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

அம்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மங்கள் ஏரியில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதுவும் சீரமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை பகுதியிலும் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது போன்ற சிறு ஏரிகளுக்கு மழைநீர் வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மழைநீர் வரும் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன.

இவைதவிர, வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேமிப்பு வசதிகளை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கு கட்டாயம் மழை சேமிப்பு வசதி அமைக்க வேண்டும் என்பதிலும், சென்னை மாநகராட்சி தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.