தினமணி 28.11.2013
விதி மீறிய கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. சீல்
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் வாகன நிறுத்தம் மற்றும் 2 அடுக்கு குடியிருப்பு கட்ட சென்னை மாநகராட்சியிடம் கட்டட உரிமையாளர் அனுமதி வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் தரைத் தளத்துடன் கூடிய 3 அடுக்குகளை வணிக பயன்பாட்டுக்காக கட்டினார். இது குறித்த அறிந்த அதிகாரிகள், பணி நிறுத்த நோட்டிஸை உரிமையாளரிடம் அளித்தனர்.
ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதனையடுத்து சீல் வைப்பதற்கான நோட்டிஸ் கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்டது. இதற்கும் உரிமையாளர் செவி சாய்க்காததால், கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் புதன் கிழமை சீல் வைத்து பூட்டினர்.