தினமணி 04.12.2013
நான்கு மாசி வீதிகளில் சாக்கடை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் உத்தரவு
நான்கு மாசி வீதிகளிலும் நடைபெறும் பாதாளச் சாக்கடை பணியால், சாலைகளில் சாக்கடை தேங்காதவாறு தினமும் கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.
மாநகராட்சி தெற்கு மண்டலம் கூடலழகர் பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஓடிவருகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆணையர் கிரண் குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த அடைப்புகளை 2 நாளில் சீர்செய்து கழிவு நீர் பாதாள சாக்கடையில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். மேலும் அவர் கூறுகையில், 2 நாள்களில் இந்த அடைப்பை சரிசெய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடியும்வரை, முந்தைய சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் தேங்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தினமும் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் மூலம் மேனுவல்களில் கழிவுநீரை உறிஞ்சி அப்புறப்படுத்த வேண்டும். இப் பணிக்கென தனியாக ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டு கண்காணிப்பு செய்ய வேண்டும். காமராஜபுரம் அண்ணா கிழக்குத் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டு அடைப்பையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும், என்றார்.
இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சாலைமுத்து, நகரப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக் குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.