தினகரன் 05.12.2013
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.
திருச்சி மாநகராட்சியில் மாநகர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழிவறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரைந்து பழுது நீக்கம் செய்திடவும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற்கொண்டு முழுமையான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஷ், உதவி ஆணையர்கள் ரெங்கராஜன், தனபால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லெட்சுமணமூர்த்தி, திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர்கள் சிவபாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.